செய்திகள்
சிறைச்சாலை

காஷ்மீர் சிறைகளில் இருந்து 70 தீவிரவாதிகள் ஆக்ராவுக்கு மாற்றம்

Published On 2019-08-08 20:18 GMT   |   Update On 2019-08-08 20:18 GMT
காஷ்மீர் சிறைகளில் இருந்து 70 தீவிரவாதிகள் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் ஆக்ரா விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆக்ரா:

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஷ்மீரின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என 70 பேரை நேற்று ஆக்ரா மத்திய சிறைக்கு மத்திய அரசு மாற்றியது. இதற்காக விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 70 பேரும் பலத்த பாதுகாப்புடன் ஆக்ரா விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் அவர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையொட்டி ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து சிறை வளாகம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பயங்கரவாதிகளை கொண்டு சென்ற வாகனத்திலும், அவர்களின் அடையாளம் வெளியே தெரியாத அளவுக்கு கறுப்பு துணியால் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்ட தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் விவரம் தெரியவில்லை. எனினும் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட கொடூரமான பயங்கரவாதிகள்தான் ஆக்ராவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News