செய்திகள்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி- மாநிலங்களவை ஒத்திவைப்பு
காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் கூறியதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் மோடி கேட்டதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும் இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்த அமளி காரணமாக மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி நீடித்தது. இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் எந்த கோரிக்கையையும் வைக்க வில்லை என அவர் உறுதி அளித்தார்.