செய்திகள்
பிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா? - உ.பி.அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா? என உ.பி. அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில (கிழக்கு ) பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா பகுதிக்கு வந்தார்.
வாரணாசி அருகேயுள்ள நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இங்கு நீங்கள் வர அனுமதி இல்லை என கூறினர். உடனடியாக பிரியங்கா காந்தி, அதே இடத்தில் காங்கிரஸ் தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிரியங்கா காந்தி மற்றும் அவருடன் தர்ணாவில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்து சென்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா? என உ.பி. அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
’சோன்பத்ராவில் சட்டமீறலாக பிரியங்காவை போலீசார் கைது செய்திருப்பது வேதனை அளிக்கிறது.
தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியினரின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்காவை தடுத்து நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேச அரசின் அதிகார துஷ்பிரயோகமாகும்.
இதன் மூலம் அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதை அறியலாம்’ என்று தனது கண்டன செய்தியில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.