செய்திகள்
வைரல் புகைப்படங்கள் அசாம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்டதா?
சமூக வலைத்தளங்களில் அசாம் வெள்ள பாதிப்பு பகுதிகளில் எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. இவற்றின் உண்மைத் தன்மையை தொடர்ந்து பார்ப்போம்.
அசாம் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
#AssamFloods எனும் ஹேஷ்டேக் மூலம் வைரலாகும் புகைப்படங்களில் வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களும் அதிகளவு பகிரப்பட்டுகின்றன. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சுமார் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ட்விட்டரில் வெளியாகியிருக்கும் சில புகைப்படங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளன. எனினும், இவை பழைய புகைப்படங்கள் தான் என்பது ரிவர்ஸ் சர்ச் செய்ததில் தெரியவந்துள்ளது. உண்மையில் வைரல் புகைப்படம் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பீகார் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.
இத்துடன் இதே புகைப்படம் 2016 ஆம் ஆண்டு பீகார் வெள்ளம் பற்றி எழுதப்பட்ட செய்திக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதேபோன்று 2016 ஜூலை மாதம் அசாம் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போதைய வெள்ள பாதிப்புகளில் எடுக்கப்பட்டதாக வைரலாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களை அப்பட்டமாக நம்பி, அவற்றை பரப்பாதீர்கள். அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க வழிசெய்யும். போலி செய்திகளால் பலர் பெருமளவு இழப்பை சந்தித்து இருக்கின்றனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.