செய்திகள்
கரடி தாக்கியதில் காயமடைந்த இளம்பெண்

திருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை தாக்கிய கரடி

Published On 2019-07-16 08:02 GMT   |   Update On 2019-07-16 08:02 GMT
திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி:

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். இவரது தந்தை இறந்து விட்டார். 4 பேரையும் தாயார் சரிவர கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக விஜயலட்சுமி தன் தாயிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்ததால், விஜயலட்சுமி வீட்டிலிருந்து வெளியேறினார். திருமலைக்கு வந்த அவர் பல இடங்களில் சுற்றித் திரிந்தார்.

இந்நிலையில் திருமலையில் உள்ள கோகர்ப்பம் நீர்த்தேக்கம் அருகில் மடங்களுக்குப் பின்புறம் உள்ள வனப்பகுதிக்குள் தற்கொலை செய்யும் எண்ணத்தில் விஜயலட்சுமி சென்றார்.

அப்போது கரடி ஒன்று அங்கு திடீரென வந்தது. கரடி இவரை பார்த்து உறுமியது. இதனால் பயந்துபோன அவர் அங்கு கிடந்த கற்களை கரடி மீது வீசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த கரடி அவரை நோக்கி வந்தது. விஜயலட்சுமி பயந்து ஓடினார். கரடி அவரை விரட்டி சென்று கடித்து தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்றவர்கள் வனப்பகுதிக்குள் ஓடிசென்று கரடியிடமிருந்து விஜயலட்சுமியை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விஜயலட்சுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கரடி தாக்கியதில் விஜயலட்சுமி இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தன்னையும், 3 சகோதரிகளையும் கவனிக்காத தாய் மீது விஜயலட்சுமி, திருமலை போலீசில் புகார் அளித்துள்ளார்.



Tags:    

Similar News