செய்திகள்
அசாம் - மூளை அழற்சி நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்வு
அசாம் மாநிலத்தில் மூளை அழற்சி நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கவுகாத்தி:
ஜப்பானிய என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை அழற்சி நோய் அசாமில் வேகமாக பரவி வருகிறது. கோக்ரஜார் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் பரவலாக காணப்படும் இந்த நோய்க்கு இந்த ஆண்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 190 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியானது.
அரசு மருத்துவமனைகளில் போதிய அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால், தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் சிகிச்சைக்கான செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும் என மாநில சுகாதார மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் மூளை அழற்சி நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 334 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.