செய்திகள்
அயோத்தி சமரசக்குழு

அயோத்தி நிலப் பிரச்சினை: 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உத்தரவு

Published On 2019-07-11 05:59 GMT   |   Update On 2019-07-11 05:59 GMT
அயோத்தி நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சமரசக் குழு வரும் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான இந்த குழுவில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவினர் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

இந்நிலையில், சமரசக் குழு சரியாக செயல்படவில்லை எனக்கூறி இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன், விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



இதையடுத்து, சமரசக் குழு விசாரணை நடத்தி, ஜூலை 25-ம்தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமரசக் குழுவை அமைத்திருப்பதாகவும், 25ம் தேதிக்குள் அவர்கள் அறிக்கையை தாக்கல் செய்து, இணக்கமான தீர்வை பரிந்துரை செய்யாவிட்டால், அதற்குப் பிறகு இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
Tags:    

Similar News