செய்திகள்
இதயம்

செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து மீண்டும் செயல்பட்ட உண்மையான இதயம்

Published On 2019-07-11 04:26 GMT   |   Update On 2019-07-11 04:26 GMT
டெல்லி ஆஸ்பத்திரியில் வியாபாரி ஒருவருக்கு செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து உண்மையான இதயம் மீண்டும் செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் அஜய் கவுல், இதயம் செயலிந்து வருவதால் மாற்று இதயம் பொருத்த வேண்டும் அல்லது செயற்கை இதயம் பொருத்த வேண்டும் என்றார். மாற்று இதயம் கிடைக்க தாமதமானதால் அவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் செயற்கை இதயம் செயல்பட்டு வந்தது. உண்மையான இதயம் செயலிழந்து ஓய்வில் இருந்தது. ஆனால் 3 மாதம் கழித்து இந்த முறை பரிசோதனைக்கு வந்தபோது, அதிசயிக்கத்தக்க வகையில் அவரது உண்மையான இதயம் இயல்பாக செயல்பட்டது. சந்தேகம் அடைந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் உண்மையான இதயம் நன்றாக செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருந்தது தெரிந்தது.

வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் உண்மையான இதயம் 10 முதல் 15 சதவீதம் தான் குணமாகும். ஆனால் இவரது இதயம் மிக நன்றாக செயல்பட்டது. இதனை உறுதி செய்த பின்னர், அவரது செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அகற்றிவிட்டோம். இப்போது அவரது இதயம் எந்த உதவியும் இல்லாமல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர் கவுல் தெரிவித்தார்.

“இது எனக்கு மறுபிறப்பு” என்று ஹனி தெரிவித்தார்.

Tags:    

Similar News