செய்திகள்
ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது பாட்னா கோர்ட்

Published On 2019-07-06 09:38 GMT   |   Update On 2019-07-06 09:38 GMT
பீகார் மாநிலத்தில் துணை முதல்வர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
பாட்னா:

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி என்ற குடும்ப பெயர் கொண்ட அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். இன்னும் எத்தனை மோடி வரப்போகிறார்களோ தெரியவில்லை என்றும் அவர் கூறினார். மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு விமர்சிக்கும் வகையில் ராகுல் மறைமுகமாக இவ்வாறு பேசியிருந்தார்.

இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பாட்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக, துணை முதல்வர் சுஷில் குமார் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி இன்று பாட்னா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது.



முன்னதாக, கோர்ட்டில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது, அவரது கார் மீது பூக்களை தூவியும், வாழ்த்து முழக்கங்கள் எழுப்பியபடியும் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர்.

இதேபோல், ராகுல் காந்தி மீது பீகாரின் புர்னியா மாவட்ட தலைமை நீதிமன்றம் மற்றும் குஜராத் நீதிமன்றத்திலும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News