பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு - அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்
பாட்னா:
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று கட்சியின் செயற் குழு கூட்டத்தை கூட்டி தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் மாயாவதி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வைத்திருந்த கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முதல் காரணம் மட்டுமல்ல முழுமையான காரணம் அகிலேஷ் யாதவ்தான். அவர் யாதவர்களுக்கும் எதுவும் செய்யவில்லை. தலித் மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. இதனால்தான் இரு இனத்தவர்களும் கூட்டணியை கைவிட்டு விட்டனர்.
பாராளுமன்ற தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகு அகிலேஷ் யாதவ் ஒரு தடவை கூட என்னை வந்து சந்தித்து பேசவில்லை. குறைந்தபட்சமாக அவர் என்னுடன் போனில் கூட பேசவில்லை. அவரதது மோசமான அணுகு முறைகளே கூட்டணியை சிதைத்து விட்டது.
அகிலேஷ் யாதவும், அவரது தந்தை முலாயம் சிங்யாதவும் நம்பகத்தன்மை இல்லாதவர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்து விட்டனர். அவர்களுக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் ரகசிய உறவு இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வின் போது, அதிக அளவு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாதீர்கள் என்று என்னிடம் அகிலேஷ் யாதவ் யோசனை கூறினார். இது ஒரு மோசமான யோசனையாக இருந்தது. அவரை நம்பி செயல் பட்டதால்தான் நமக்கு பல இடங்களில் தோல்வி ஏற்பட்டு விட்டது.
அகிலேஷ் யாதவ் எடுத்த இந்த முடிவின் பின்னணியில் பாரதிய ஜனதா இருக்கும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி ஆட்சி நடந்த போது யாதவர்கள் மட்டுமே பலன் அடைந்தனர். மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். இது மற்ற சமூகத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.
அது நமக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இனி சமாஜ்வாடி கட்சியுடன் நாங்கள் ஒரு போதும் கூட்டணி சேர மாட்டோம்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.