செய்திகள்
உ.பி.யில் கடும் வெப்பம்- ரெயிலில் பயணித்த 4 தமிழர்கள் பலி
உத்தரபிரதேசத்தில் ரெயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்சி:
இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் வரலாறு காணாத அளவு 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 68 பேர் அடங்கிய குழு வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் கோவைக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெப்பம் காரணமாக ஜான்சி அருகே அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் 4 பேர் பலியாகினர்.
பச்சையா (வயது 80), பாலகிருஷ்ணா (வயது 67), தனலட்சுமி (வயது 74), தெய்வானை (வயது 71) ஆகியோர் பலியானதாக தெரியவந்துள்ளது. மேலும் சுப்பாரய்யா (வயது 71) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரெயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.