செய்திகள்

ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்

Published On 2019-05-09 06:41 GMT   |   Update On 2019-05-09 06:41 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதாக புகார் செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று வழக்கை தள்ளுபடி செய்தது. #RahulGandhi #SupremeCourt
புது டெல்லி:

காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டன் குடிமகன் என்ற முறையில் அவர் அந்த முதலீட்டை செய்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது சுட்டிக்காட்டி இருந்தன. மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ’ராகுல் வின்சி’ என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர், பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டு தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? என்று அந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.

இதே இரட்டை குடியுரிமை விவகாரத்தை முன்வைத்து பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை  15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என  ராகுல் காந்திக்கு  மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் 2 பேர் வழக்கு  தொடர்ந்தனர்.

இந்த  வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்தி மீதான  இரட்டை குடியுரிமை வழக்கினை தள்ளுபடி செய்துள்ளனர். #RahulGandhi #SupremeCourt

Tags:    

Similar News