செய்திகள்

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தில் 5 பேர் படுகொலை- மனநிலை பாதித்த சகோதரர் வெறிச்செயல்

Published On 2019-02-23 09:27 GMT   |   Update On 2019-02-23 09:27 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனநிலை பாதித்த நபர் ஒருவர், தன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JharkhandMurder
ஜாம்ஷெட்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேடா கர்ஸ்வான் மாவட்டம் புதுசில்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனு சோரன். மனநிலை பாதிக்கப்பட்ட இவர், தன் மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரர் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இன்று அதிகாலையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்த அவர் கூர்மையான ஆயுதத்தால் குடும்பத்தினரை சரமாரியாக வெட்டினார்.

அரைகுறை தூக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். எனினும் கையில் சிக்கியவர்களை எல்லாம் சுனு சோரன் வெட்டி சாய்த்துள்ளார். இதில், அவரது சகோதரர் ரவி சோரன், 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். சுனு சோரனின் தாய், மற்றொரு சகோதரர் ஆகியோர் பலத்த காயங்களுடன் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  சுனு சோரனின் மனைவி மற்றும் குழந்தைகள் தாக்குதலில் இருந்து தப்பி வெளியே ஓடியதால் உயிர்பிழைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனு சோரனை கைது செய்தனர். சுனு சோரன் நேற்று இரவு மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டில் தூங்கியதாகவும், அதிகாலையில் எழுந்து வீட்டுக்கு வந்ததும் ஆத்திரத்தில் குடும்பத்தினரை தாக்கியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JharkhandMurder
Tags:    

Similar News