செய்திகள்

டிடிவி தினகரனுக்கு எதிரான பெரா வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

Published On 2019-02-18 10:49 GMT   |   Update On 2019-02-18 11:36 GMT
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பெரா வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #TTVDinakaran #FERACas
புதுடெல்லி:

டிடிவி தினகரன் கடந்த 1996ம் ஆண்டு  இங்கிலாந்தை சேர்ந்த பர்க்லேஸ் வங்கி மூலம் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற  நிறுவனத்துக்கு 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலர்  முதலீடு செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு (பெரா) பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 20  ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு  விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டது.

இதற்கிடையே வழக்கு தொடர்பான ஆவணங்களை  டிடிவி தினகரனுக்கு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது.



இவ்வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தாலும், விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

அத்துடன், டிடிவி தினகரன் மீது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெரா வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத்துறையின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, டிடிவி தினகரனுக்கு  நோட்டீஸ் அனுப்பினர். #TTVDinakaran #FERACase
Tags:    

Similar News