செய்திகள்

ஆந்திராவில் தெலுங்குதேசம் எம்எல்ஏ கட்சியில் இருந்து விலகல்

Published On 2019-01-23 11:22 GMT   |   Update On 2019-01-23 11:22 GMT
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ. மல்லிகார்ஜூனா ரெட்டி கட்சியில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். #ChandrababuNaidu #MallikarjunaReddy
விஜயவாடா:

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் ராஜம்பேட் தொகுதி எம்.எல்.ஏ. மல்லிகார்ஜூனா ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து திடீரென்று விலகி உள்ளார்.

மேலும் அவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேருவதாக அறிவித்து உள்ளார்.

இதையடுத்து நேற்று ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். பின்னர் மல்லிகார்ஜூனா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்குதேசம் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பாகுபாடுகள் உள்ளன. அக்கட்சியில் இருப்பது தாங்க முடியாத வலியை தருகிறது.

இதனால் நல்ல தலைமையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்தேன்.

சந்திரபாபு நாயுடு 23 எம்.எல்.ஏ.க்களை கால்நடை மந்தையில் விலைக்கு வாங்குவதுபோல் வாங்கினார். ஆனால் ஜெகன் மோகன்ரெட்டி என்னிடம் உங்கள் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேருங்கள் என்று கூறினார். இதுதான் இரு கட்சிக்கும், இரு தலைவர்களுக்கும் உள்ள ஜனநாயக வேறுபாடு.

இம்மாத கடைசியில் முறைப்படி எம்.எல்.ஏ. பதவியையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைவேன்.

அமைச்சர் ஆதிநாராயணா ரெட்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவதில் உண்மை இல்லை. அது வெறும் புரளிதான்.

இளம் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் அரசியல் கடைபிடிக்கும் தூய்மை போன்றவற்றால் தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #MallikarjunaReddy
Tags:    

Similar News