பிரசவத்தில் தாயும், குழந்தையும் உயிரிழப்பு - தவறான சிகிச்சை என உறவினர்கள் போலீசில் புகார்
கொழிஞ்சாம்பாறை:
பொள்ளாச்சி அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருமாட்டியை சேர்ந்தவர் கிரிஷ்குமார் (வயது 30). இவரது மனைவி சினி (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 20-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தாயும், குழந்தையும் ஆபத்தான நிலையில் உள்ளது. திருச்சூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து ஆம்புலன்சில் இருவரையும் நேற்று அழைத்துச்சென்றனர். உறவினர்களில் சிலர் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மீனாட்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.
ஆம்புலன்சில் சென்றபோது தாயும், குழந்தையும் அடுத்தடுத்து இறந்தனர். மீனாட்சிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிகிச்சையில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.