2 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் காஷ்மீரில் வாலிபரை கடத்திய பயங்கரவாதிகள்
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 பேரை ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
இதில் 2 பேரை பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர். 2 பேரை விட்டுவிட்டனர். ஒருவரை காணவில்லை. போலீசுக்கு தகவல் கொடுத்ததால் 2 இளைஞர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர். 17 வயதான பள்ளி மாணவனை அவர்கள் துபாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
அதை தொடர்ந்து 19 வயதான நதிம் மன்சூர் தர் என்ற இளைஞரை கழுத்தை அறுத்துக்கொன்றனர். அவரது உடல் சோபியான் பகுதியில் கிடந்தது. இந்த இரண்டு சம்பவமும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 3-வது வாலிபரை பயங்கரவாதிகள் இன்று கடத்தி சென்றனர். அந்த வாலிபரின் பெயர் சுகைல் அகமது.
தெற்கு காஷ்மீரில் உள்ள கிராமத்தில் இருந்தபோது அவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். கடந்த 24 மணிநேரத்தில் நடந்த 3-வது கடத்தல் சம்பவம் இதுவாகும்.
இந்தநிலையில் காஷ்மீரில் இன்று 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
சோபியான் மாவட்டம் ஜெய்ன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்கள் அல்-பாதர் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவார்கள். #militants