செய்திகள்

ராம பிரானை இதயத்தில் வைத்திருங்கள் - சசிதரூர் எம்.பி. அறிவுரை

Published On 2018-11-04 22:21 GMT   |   Update On 2018-11-04 22:21 GMT
உண்மையில் ராம பிரானை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள் என்று முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் தெரிவித்துள்ளார். #BuildRam #Heart #ShashiTharoor
புதுடெல்லி:

அயோத்தி விவகாரம் மீண்டும் தற்போது சூடுபிடித்து உள்ளது. இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர், எந்த ஒரு நல்ல இந்துவும் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியில் ராமர் கோவில் கட்டுவதை விரும்பமாட்டார் என தெரிவித்தார்.

இது குறித்து பா.ஜனதாவினர் அதிருப்தி வெளியிட்டு இருந்த நிலையில், செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியின்போது அது குறித்து சசிதரூர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘உண்மையில், ராம பிரானை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள் என்றுதான் இந்து உரைகளும், இலக்கியங்களும் கூறுகின்றன. அவரை இதயத்தில் வைத்துவிட்டால், வேறு எங்கும் அவர் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ பிரச்சினையில்லை. ஏனெனில் அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.

வன்முறையின் மூலம் ராமர் கோவில் அமைப்பதை எந்த ஒரு இந்துவும் விரும்பமாட்டார் என மீண்டும் வலியுறுத்தி கூறிய சசிதரூர், நல்ல இந்து என்பவர் சட்டத்தை மதிப்பவராகவே இருப்பார் எனவும், இந்து இலக்கியங்கள் வன்முறையை அனுமதிப்பது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

பா.ஜனதா தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் ஆகியோரும், தனது கருத்தை ஏற்கனவே வலியுறுத்தி இருந்ததாகவும் சசிதரூர் கூறினார்.  #BuildRam #Heart #ShashiTharoor 
Tags:    

Similar News