என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசிதரூர்"

    • நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி.
    • வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக மம்தானி சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    நியூயார்க் நகர மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை முதல் முறையாக நேற்று சந்தித்துப் பேசினார்.

    அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் டிரம்ப், மம்தானி சந்திப்பு அந்நாட்டு அரசியலில் அனைவராலும் உற்று பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த இருவரது சந்திப்பை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசிதரூர் வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக, சசிதரூர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் என்பது இப்படித்தான் செயல்பட வேண்டும். தேர்தலின் போது எந்த வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் உங்கள் கருத்தை முன்வைத்து போராடுங்கள். தேர்தல் முடிந்த பின், நாட்டின் பொதுவான நலன்களை நிறைவேற்ற, மக்களிடம் அளித்த வாக்குறுதிகளின்படி ஒத்துழைப்புடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இதுபோன்ற சந்திப்புகளை இந்தியாவில் அதிகம் பார்க்க விரும்புகிறேன். என் அளவிலான பங்களிப்பையும் செய்ய முயற்சித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    அண்மைக்காலமாக, பாஜ தலைவர்களை அதிகம் புகழ்ந்தும்,. காங்கிரசை விமர்சித்தும் சசிதரூர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சசிதரூரின் டுவீட் சர்ச்சையாகி உள்ளது.
    • சசிதரூரின் மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்து கொண்டு சசிதரூர் எம்.பி. அடிக்கடி பாராட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சசிதரூரின் டுவீட் சர்ச்சையாகி உள்ளது.

    நேரு, இந்திரா காந்தியை மேற்கோள்காட்டி அத்வானியை புகழ்ந்தார். அத்வானியின் நீண்ட கால சேவையை ஒரு அத்தியாயத்தை கொண்டு தீர்மானிப்பது நியாயமற்றது. அவருக்கும் அதே மரியாதையை நாம் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    சசிதரூரின் இந்த கருத்து தொடர்பாக அவர் மீது காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் பவன் கேரா கூறும்போது,"இது சசிதரூரின் தனிப்பட்ட கருத்து. அவர் எப்போதும் போலவே தனக்காக பேசுகிறார்.

    அவரது சமீபத்திய அறிக்கையில் இருந்து காங்கிரஸ் விலகி இருக்கிறது. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக இருந்து கொண்டு அவர் தொடர்ந்து இப்படி செயல்டுவது சரியானதல்ல" என்றார்.

    • நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. எனது பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன.
    • அமெரிக்கா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவியது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக, உலக நாடுகளுக்கு விவரிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது.

    அவற்றுள் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒரு குழுவும் ஒன்று. சசிதரூரை தவிர, அந்த குழுவில் எம்.பி.க்கள் சர்பராஸ் அகமது, காந்தி ஹரிஷ் மதுர் பாலயோகி, சஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி சூர்யா மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரஞ்சித் சந்து ஆகியோர் அடங்குவர்.

    கடந்த மாதம் 24-ந்தேதி இந்தியாவில் இருந்து நியூயார்க் சென்று கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசிலுக்கு பயணம் செய்து கடந்த 3-ந் தேதி இந்த குழு சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக வாஷிங்டனுக்கு வந்தது. அங்கு அமெரிக்க செனட் குழுவினர், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினர்.

    பின்னர் அங்கு சசி தரூர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மோதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயாராக இருப்பதாக கூறினோம். பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொண்டதன்பேரில் மோதல் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மொழியை பயன்படுத்தும் வரை, நாங்கள் பலத்தின் மொழியை பயன்படுத்துவோம் அதற்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை.

    தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் என்று கருதுபவர்கள் தங்களை தாங்களே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும். தனிநபர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.

    சமூக ஊடகங்களில் சசி தரூர் காங்கிரசில் தொடர்ந்து இருப்பாரா? அல்லது பா.ஜனதாவில் சேருவாரா? என்பது குறித்து விவாதம் நடைபெறுகிறது. நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. எனது பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் அது குறித்து ஏன் கேள்வி எழ வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.

    நாங்கள் இங்கு ஒரு கட்சி அரசியல் நோக்கத்துக்காக வரவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவின் பிரதிநிதிகளாக வந்து இருக்கிறோம். தேசிய நலன், தேசிய பாதுகாப்பு என்று வரும்போது தேசம் ஒன்றுபட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

    யாரும் எங்களை மோதலை நிறுத்துங்கள் என்று மத்தியஸ்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அமெரிக்கா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவதை கவனிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வெள்ளை மாளிகையுடனான இந்தியா உறவில் எந்தவிதமான சிக்கல்களையும் ஏற்படுத்த நாங்கள் இங்கு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு மட்டுமே பழிவாங்குகிறோம்.
    • பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியா மீண்டும் பதிலடி கொடுக்கும்.

    புதுடெல்லி:

    காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இந்த நடவடிக்கை தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பியது.

    இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினர். இதில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான குழு பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அமெரிக்காவுக்கு சென்றடைந்தது. அப்போது வாஷிங்டனில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சசி தரூர் பேசியதாவது:-

    பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா யாரையும் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்கவில்லை. அமெரிக்க அதிபர் பதவி மற்றும் அதிபர் டிரம்ப் மீது மிகுந்த மரியாதை உண்டு. அதேவேளையில் நாங்கள் யாரையும் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்கவில்லை. பல்வேறு வெளியுறவு அமைச்சர்களிடமிருந்து நமது வெளியுறவு அமைச்சருக்கும், நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் அழைப்புகள் வந்தன. இந்த விஷயத்தில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக இருந்தது. அது உண்மைதான். ஆனால் இந்த அழைப்புகளில் எதிலும் வர்த்தகம் குறிப்பிடப்படவில்லை. நாங்கள் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு மட்டுமே பழிவாங்குகிறோம். இந்த மோதலை நீடிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை என்று எங்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

    இந்தியாவின் தாக்குதல்களில் பெரிய அளவிலான சேதத்தை சந்தித்த பிறகு, மே 10-ந்தேதி பாகிஸ்தான் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரியது.

    எங்கள் தலையில் துப்பாக்கியை நீட்டி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்பதை அமெரிக்கா சிறிது காலமாகவே புரிந்து கொண்டு உள்ளது என்று நினைக்கிறேன். எங்கள் தலையில் துப்பாக்கியை நீட்டியவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியா மீண்டும் பதிலடி கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.
    • சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசிதருர். இவர் தனது மனதில் உள்ள கருத்துக்களை கட்சிக்கு அப்பாற்பட்டு மிகவும் வெளிப்படையாக தெரிவிப்பார். இதனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி யிலேயே கடும் எதிர்ப்பு உள்ளது.

    இந்தநிலையில் சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார். அமெரிக்காவில் அதிபர் டிரப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசியதை பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாட்டையும் பாராட்டினார்.

    அது மட்டுமின்றி கேரள மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசையும் பாராட்டினார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்தநிலையில் பிரதமர் மோடியை சசிதரூர் எம்.பி. மீண்டும் பாராட்டியுள்ளார்.

    "கோவிட்-19" காலக் கட்டத்தில் பல நாடுகளுக்கு "கோவிட்" தடுப்பூசிகளை வினியோகிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உதவியதாக கூறியி ருக்கும் அவர், அதற்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சசிதரூர் எம்.பி. கூறியிருப்ப தாவது:-

    "கோவிட்-19" காலத்தில் உலகின் தடுப்பூசி மையமாக இந்திய திகழ்ந்தது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது. "கோவிட்" தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது வளரும் நாடுகளுக்கு இந்தியா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வினியோகம் செய்தது.

    சமமான தடுப்பூசி வினியோகத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு இந்திய பங்களித்தது. தொற்றுநோயின் இருண்ட காலத்திலும், உலகளாவிய சுகாதார ராஜ தந்திரத்தில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தியது. நெருக்கடியான நேரங்களில் பல்வேறு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.

    பணக்கார நாடுகள், தங்களின் சொந்த குடிமக்களுக்காக அதிக அளவிலான தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தங்களின் வளங்களை செலவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட வேண்டியிருந்தது. அவை ஏழை நாடுகளுக்கு வினியோகிக்கப்பட்டிருந்தால் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

    இவ்வாறு சசி தரூர் கூறியிருக்கிறார்.

    சமீபத்தில் ஒரே மாதத்தில் இரண்டு முறை பிரதமர் மோடியை பாராட்டி சசி தரூர் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரத மரை பாராட்டியிருக்கிறார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தலை மைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக இது வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்து உள்ளது.

    இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்து உள்ளது. எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பும் நல்ல வாதங்கள் எடுத்து வைக்கின்றன என்பது எனது சொந்த கருத்து. இந்த பிரச்சினை சமரசத்துக்குரியதுதான். ஏனெனில் நமது நிகழ்காலத்தின் மதிப்பீடுகளை உறுதிப்படுத்த கடந்த காலத்திலிருந்து இந்த சின்னத்தை (செங்கோல்) தழுவிக்கொள்வோம்' என குறிப்பிட்டு இருந்தார்.

    • இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.
    • பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவார்.

    இந்நிலையில் சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருடன் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டதை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான அவரது பதிவில், துபாய் வழியாக டெல்லிக்கு திரும்பினேன். அப்போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் சோயிப் அக்தர் என்னை சந்தித்து 'ஹலோ' என்று கூறியதும் ஆனந்தமும், ஆச்சரியமும் அடைந்தேன். வேகப்பந்து வீச்சில் ஸ்மார்ட்டான, அதே நேரத்தில் ஊக்கமளிக்கும் மனிதர் அவர். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். என்னை வாழ்த்த வந்த இந்தியர்கள் அனைவரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுக்க விரும்பினர். இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்லதோர் உரையாடல் மேற்கொண்டோம் என கூறியிருந்தார்.

    இந்த பதிவை பார்த்த நெட்டிசன் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதில் சிலர், சோயிப் அக்தர் மற்றும் சசிதரூர் ஆகியோரை பார்க்க ஒன்றுபோல் இருப்பதாகவும், இருவரின் முகம், ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவை ஒன்று போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது.
    • காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்

    கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

    கேரளாவில் மதக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். விரைவாக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கொன்று அழிக்கும் மனநிலைக்கு இரையாகும் என் மாநிலத்தை பார்ப்பது சோகமானது. இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் வன்முறையால் வன்முறையை தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்று அவர்களை பின்பற்றுபவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன்.
    • திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணுர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புர, வயநாடு, சாகர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம், பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.

    அந்த தொகுதிகளை கைப்பற்றும் வகையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.


    இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியிருக்கிறார்.

    திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். கட்சியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • சசிதரூர் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
    • ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களையும் வெளியிட்டு இருந்தார். அதில் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார். இதில் முக்கியமாக ரூ.5,11,314 மதிப்பிலான பிட்காயின் இருப்பதாக கூறியுள்ளார்.

    மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார். இவற்றை தவிர ரூ.9.33 கோடி பங்கு முதலீடுகள், ரூ.3.46 கோடி கார்பரேட் பத்திரங்கள், ரூ.91.7 லட்சம் டெபாசிட் ஆவணங்கள், ரூ.36 ஆயிரம் கையிருப்பு போன்றவையும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.
    • எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் தற்போதைய எம்.பியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் பன்னியன் ரவீந்திரன் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சசிதரூர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், ஓட்டு வாங்க பொதுமக்கள் மற்றும் பாதிரியார் உள்ளிட்ட கிறிஸ்வத தலைவர்களுக்கு பாரதிய ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

    சசிதரூரின் இந்த கருத்துக்கு தன்மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் புகார் செய்தனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு விவகாரத்தில் சசிதரூருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • சசிதரூர் குரங்குக்கு 2 வாழைப்பழங்களை சாப்பிட கொடுத்தார்.
    • குரங்கால் எனக்கு அச்சுறுத்தல் இருக்காது என நம்பி, அதன் செயல்பாடுகளை வரவேற்றேன்.

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் நேற்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டின் தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்போது குரங்கு ஒன்று அவரை நோக்கி வேகமாக ஓடிவந்தது. சசிதரூர் எந்தவித சலனமும் இன்றி குரங்கு என்ன செய்கிறது என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

    பின்னர் அந்த குரங்கு சசிதரூரின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டது. இதையடுத்து சசிதரூர் குரங்குக்கு 2 வாழைப்பழங்களை சாப்பிட கொடுத்தார். அவற்றை கையில் வாங்கிய குரங்கு பொறுமையாக சாப்பிட்டது.

    குரங்கு தனது மடியில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சசிதரூர் அமைதியாக செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார். வாழைப்பழங்களை சாப்பிட்டு முடித்த பிறகு அந்த குரங்கு, சசிதரூரை கட்டியணைத்து அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தியது. அதன் பின்னர் சசிதரூரின் மார்பில் படுத்துக்கொண்ட குரங்கு கண்ணை மூடி உறங்கியது. பின்னர் சசிதரூர் மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்திருக்க ஆரம்பித்தபோது, குரங்கு அவரது மடியில் இருந்து குதித்து ஓடியது.

    மனதுக்கு இதமளிக்கக்கூடிய இந்த காட்சிகள் அனைத்தையும் சசிதரூரின் உதவியாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் சசிதரூர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, இந்த சம்பவம் குறித்த தனது அனுபவத்தை விவரித்தார்.

    அந்த பதிவில் அவர், "வனவிலங்குகள் மீதான பயபக்தி எனக்குள் வேரூன்றி இருக்கிறது, குரங்கு கடியால் ரேபிஸ் ஷாட் தேவைப்படும் அபாயம் குறித்து சிறிது கவலைப்பட்டாலும் அமைதியாக இருந்தேன். குரங்கால் எனக்கு அச்சுறுத்தல் இருக்காது என நம்பி, அதன் செயல்பாடுகளை வரவேற்றேன். எனது நம்பிக்கை பலித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன், எங்கள் சந்திப்பு முற்றிலும் அமைதியாகவும் மென்மையாகவும் இருந்தது" என குறிப்பிட்டுள்ளார். சசிதரூர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதில் நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டனர்.

    ×