செய்திகள்
பாகிஸ்தான் உளவுப்படையுடன் மோடி, அமித் ஷாவுக்கு தொடர்பு - காங்கிரஸ் நேரடி குற்றச்சாட்டு
பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யுடன் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் இதற்காக மன்னிப்பு கோருமாறு வலியுறுத்தியுள்ளது. #RandeepSurjewala
புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்டீப் சுர்ஜேவாலா இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது இந்தியாவின் பிரதமராக மோடி வர வேண்டும் என்று பாகிஸ்தான் உளவுத்துறையின் தலைவர் அஸாத் டுரானி முன்னர் குறிப்பிட்டிருந்தார். மோடி, அமித் ஷா ஆகியோருக்கு பாகிஸ்தான் உளவுத்துறையுடன் உள்ள தொடர்புகளை நிரூபிக்க இதைவிட பெரிய ஆதாரம் தேவையில்லை.
இந்த தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரிக்க வந்த பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவில் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளும் அனுமதிக்கப்பட்டனர்.
பதான்கோட் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை குழுவில் எந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டனர் என்பதற்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக மோடியும், அமித் ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரன்டீப் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். #RandeepSurjewala #ModialliancewithISI #AmitShahalliancewithISI