செய்திகள்
மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்
உத்திரப்பிரதேசத்தில் மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தியதால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WhatsApp
லக்னோ :
உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நௌகௌன் சதட் எனும் கிராமத்தில் மெகந்தி என்பவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் பெண் அமர்ந்திருக்க மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களை எதிர்பார்த்து பெண் வீட்டார் காத்திருந்தனர்.
ஆனால், திருமண நேரம் நெருங்கியும் மாப்பிள்ளை வீட்டார் வராததால், பெண்ணின் தந்தை மெகந்தி, மாப்பிள்ளையின் தந்தை ஹைதருக்கு போன் செய்தார். ஆனால், மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப்பிலேயே மூழ்கி இருப்பதால் தங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, வரதட்சனையாக மாப்பிள்ளை வீட்டார் ரூ.65 லட்சம் கேட்டார்கள், அதை மனதில் வைத்தே இப்போது திருமணத்தை நிறுத்தியுள்ளனர் என மெகந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், மாப்பிள்ளை வீட்டாரோ, பெண்ணுக்கு அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. திருமணத்திற்கு முன்பாகவே எங்களது உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அவர் பல்வேறு செய்திகளை அனுப்பியுள்ளார். மணப்பெண் வாட்ஸ் அப்க்கு அடிமை ஆனது போல் இருந்ததால் நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம் என தெரிவித்தனர்.
ஒரு திருமணம் வாட்ஸ் அப்பை காரணம் காட்டி நின்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WhatsApp