செய்திகள்
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க பா.ஜ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - மன்மோகன் சிங்
வேலைவாய்ப்பு, கருப்பு பணம் மீட்பு உள்பட மோடி அரசு அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #ManmohanSingh
புதுடெல்லி :
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் மந்திரியுமான கபில்சிபில் எழுதிய புத்தக வெளியீட்டு விழா புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
எளிமையான முறையில் தொழில் செய்யும் திட்டங்களில் இருந்து இன்னும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கணிசமான நன்மைகளை பெறவில்லை. விவசாயம், பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது.
கடந்த 4 வருடங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சதவிதம் மிகவும் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது? மத்திய அரசின் இந்த வாக்குறுதியை எதிர்பார்த்து இளைஞர்கள் மிகவும் வேதனையுடன் காத்திருக்கிறார்கள்.
நாட்டில் உள்ள பெண்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் ஒருவித பாதுகாப்பின்மையோடு வாழ்ந்து வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கப்படும் என இந்த அரசு அளித்த வாக்குறுதி தொடர்பாக எந்த ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பல்வேறு வாக்குறுதிகளை கூறி கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்ற மோடி அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டது. ஆனால், அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என மோடி கூறிவருவதை மக்கள் நம்பவில்லை என மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார். #ManmohanSingh