செய்திகள்

ஸ்ரீஜன் ஊழல் வழக்கு - பீகார் துணை முதல் மந்திரி உறவினர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

Published On 2018-09-06 14:19 GMT   |   Update On 2018-09-06 14:28 GMT
ஸ்ரீஜன் ஊழல் தொடர்பாக பீகார் துணை முதல் மந்திரி சுசில்குமார் மோடியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது. #SrijanScam #SushilKumarModi #ITRaid
பாட்னா:

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பீகார் மாநிலம் பாகல்பூரில் ஸ்ரீஜன் மகிளா விகாஸ் சயோக் சமிதி என்ற என்.ஜி.ஓ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது பெண்களுக்கு தொழில்முறை பயிற்சி வழங்குகிறது. இந்த அமைப்பு அரசு நலத்திட்டங்களுக்கான நிதியை பாகல்பூர் மாவட்ட நிர்வாகத்தின் வங்கி கணக்குகளில் இருந்து முறைகேடாக எடுத்துள்ளதாக புகார் எழுந்தன. ரூ.1200 கோடி அளவில் ஊழல் நடந்தது தெரிய வந்தது. 

ஸ்ரீஜன் தொண்டு நிறுவனம் மூலம் மாநில அரசு ரூ.1200 கோடி ஊழல் செய்ததாகவும் இதற்கு பொறுப் பேற்று முதல் மந்திரி நிதிஷ்குமார், துணை முதல் மந்திரி சுசில்குமார் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் குற்றம் சாட்டியது. இதையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நிதிஷ்குமார் உத்தரவிட்டார். சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீஜன் ஊழல் விவகாரம் தொடர்பாக பீகாரில் உள்ள துணை முதல் மந்திரி சுசில்குமார் மோடியின் உறவினர் ரேகா மோடி ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதேபோல், பாகல்பூரில் உள்ள பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

துணை முதல் மந்திரி  சுசில்குமார் மோடி உறவினர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையை தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. #SrijanScam #SushilKumarModi #ITRaid
Tags:    

Similar News