செய்திகள்

சிறுமியை கற்பழிக்க முயன்றவர்களை கடித்துக்குதறிய செல்ல நாய்

Published On 2018-08-21 00:03 GMT   |   Update On 2018-08-21 00:03 GMT
மத்தியப்பிரதேசத்தில் சிறுமியை கற்பழிக்க முயன்ற இரண்டு பேரை அச்சிறுமி வளர்த்து வந்த செல்ல நாய் கடித்துக்குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால் :

இந்தியாவில் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கவலை அளிக்கக்கூடிய வகையில் உயர்ந்து வருகிறது. நம் நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி கற்பழிக்கப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் கரீலா எனும் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுமி, மளிகை பொருட்கள் வாங்குவதற்காக இரவு நேரத்தில் அவரது வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியே சென்ற இரண்டு நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக குடிசை ஒன்றிற்கு தூக்கி சென்று கத்தி முனையில் கற்பழிக்க முயன்றுள்ளனர்.

ஆனால், சிறுமி பயத்தில் கத்தி கூச்சல் இட்டதால் அந்த சத்தம் கேட்டு அவர் செல்லமாக வளர்த்து வந்த நாய் எஜமானர் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து அப்பகுதிக்கு ஓடி வந்துள்ளது.

அங்கு சிறுமியை பிடித்து வைத்திருந்தவர்களை பார்த்து நாய் கடிக்க முயன்றதால் தங்கள் கைவசம் இருந்த கத்தியால் அவர்கள் நாயை தாக்கியுள்ளனர். இருப்பினும் அவர்களை நாய் கடித்துக்குதறியது.

நீண்ட நேரமாக சிறுமியின் அலரல் மற்றும் நாய் குறைக்கும் சத்தம் கேட்கவே அப்பகுதி மக்கள் குடிசை இருக்கும் பகுதிக்கு விரைந்து வந்ததால் அந்த இடத்தை விட்டு காமுகர்கள் தப்பியோடினர்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகார் அடிப்படையில் தப்பியோடிய ஐசு அகிவார்(39) மற்றும் புனித் அகிவார்(24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News