செய்திகள்

கேரளாவில் மழை வெள்ளத்தால் ரூ.8300 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது - பினராயி விஜயன்

Published On 2018-08-12 18:43 GMT   |   Update On 2018-08-12 18:43 GMT
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.8,300 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
திருவனந்தபுரம்:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டன.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 39 பேர் பலியாகினர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே, கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர்  பார்வையிட்டார். அவருடன் முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி அல்போன்ஸ் ஆகியோரும் சென்றனர்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங், கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண தொகையாக ரூ.8,300 கோடி தேவை என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் ரூ.8,316 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.400 கோடியை தற்போது வழங்க வேண்டும். உடனடி நிவாரணம், புனரமைப்பு பணிகளுக்கு ரூ.820 கோடியை மத்திய அரசிடம் ஏற்கனவே கேட்டுள்ளோம். 

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 20 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமாகியுள்ளன. சுமார் 10 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு சாலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளை மீண்டும் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
Tags:    

Similar News