செய்திகள்

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.75 லட்சம் ஹவாலா பணம் கடத்தல் - 2 பேர் கைது

Published On 2018-08-06 05:30 GMT   |   Update On 2018-08-06 05:30 GMT
கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.75 லட்சம் ஹவாலா பணத்தை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கோவையில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக பாலக்காடு மாவட்ட எஸ்.பி. தேபேஷ்குமார் பெகராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் பாலக்காடு வடக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையிலான போலீசார் கோவை- பாலக்காடு ரோடு கல்மண்டபம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது.

சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் ரூ.75 லட்சம் இருந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் அந்த பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது.

பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது கார் டிரைவர் மற்றும் திரூரங்காடியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 73) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது கோவையில் இருந்து மலப்புரத்திற்கு பணம் கடத்தியதாக கூறினர்.

கோவையில் இது தொடர்பான நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.
Tags:    

Similar News