search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹவாலா பணம்"

    • முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
    • பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்க புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ்சில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    ஆனால் அந்த முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அவரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் (வயது70) என்பதும், புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பணத்திற்கு எந்தவித வரவு-செலவு கணக்கும் இல்லை.

    எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதுகுறித்து போலீசார், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.70 லட்சத்தையும் கைப்பற்றியதுடன், பீம்சிங்கையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி நூறடிசாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் நேற்று முன்தினமும் புதுச்சேரியில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இந்த நிலையில் புதுவையில் தற்போது ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ஆட்டோ டிரைவரான இவர் மாதவரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு 3 வாலிபர்கள் செங்குன்றம் எட்டயபாளையத்திற்கு செல்வதற்காக இவரது ஆட்டோவில் பயணம் செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் மீது ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வால்டாக்ஸ் ரோட்டில் ஆட்டோவை நிறுத்திவிட்டு எதிரே உள்ள யானைக்கவுனி போலீஸ் நிலையத்துக்கு சென்று எனது ஆட்டோவில் சந்தேகம் படும்படி 3 பேர் உள்ளனர் என்று தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது பெயர் யாசின், தாவூத், பைசூலா என்பது தெரியவந்தது. 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு காரில் வந்துள்ளனர்.

    அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்ட போது ரூ. 1 கோடி பணம் இருந்தது. இது பற்றி விசாரித்த போது இவர்கள் முதலாளியான முகமத் என்பவர் எட்டயப்பாளையத்தில் உள்ள தத்தா என்பவரி டம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

    இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெயிலில் பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவரிடம் விசாரித்த போது பணத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை.

    செங்கல்பட்டு:

    சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று காலை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நின்றபோது போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த காஜா மொய்தீன்(36) என்பவர் தனது பையில் கட்டு, கட்டாக பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் ரூ.10 லட்சம் இருந்தது.

    இதுபற்றி போலீசார் அவரிடம் விசாரித்த போது பணத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை. மேலும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்.

    இதையடுத்து போலீசார் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? ஹவாலா பணமா? என்பது குறித்து காஜா மொய்தீனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் காரில் வந்த இலங்கை தமிழர் உள்பட 4 பேரிடம் ரூ.1 கோடி சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    • பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், பகுதியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப் - இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையோரம் சொகுசு கார் ஒன்று நின்று நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமாக கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் இருந்தவர்கள் இலங்கை தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பணம் எப்படி கிடைத்தது?அதனை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் சவிதா முன்னிலையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
    • வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    அவினாசி:

    திருப்பூா் மாவட்டம் பழங்கரை பிரிவு அருகே அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

    அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த 2பேர் பழங்கரை பிரிவு அருகே இறங்கினா். இதையடுத்து, போலீசாா் அவா்கள் இருவரும் கொண்டு வந்த கைப்பைகளில் சோதனை நடத்தினா். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 கோடி இருந்தது தெரியவந்தது. அப்பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

    விசாரணையில் அவா்கள் வேலூா், சைதாப்பேட்டையை சோ்ந்த ஆரீப் (வயது 47), பொன்னியம்மன் நகரை சோ்ந்த அப்துல் காதா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த அவிநாசி போலீசார் அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர்.
    • நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக 30 கிலோ மீட்டர்தூரத்தில் இலங்கை நாட்டின் தலைமன்னாரை சென்றடைய முடியும்.

    இதன் காரணமாக 2 நாடுகளுக்கும் இடையே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இங்கிருந்து கடல் அட்டை, மஞ்சள் கிழங்கு, வலி நிவாரண மாத்திரைகள், பீடி இலைகள் மற்றும் அந்த நாட்டில் தட்டுப்பாடுடைய பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் இலங்கையில் இருந்து கஞ்சா, தங்க கட்டிகள் உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. தற்போது மதுரை, திருச்சி, சென்னை ஆகிய விமான நிலையங்களில் சுங்கத்துறையினரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை அதிக அளவில் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.

    கடத்தல்காரர் ஒருவரின் செல்போன் நம்பரை கண்டறிந்து அதனை அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த போன் மூலம் நடந்த உரையாடல்களும் சேகரிக்கப்பட்டது. அப்போது கடந்த 31-ந்தேதி பிளாஸ்டிக் படகு மூலம் 3 பேர் தங்க கட்டிகளை கடல் வழியாக கடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினர். இதைத்தொடர்ந்து இரு துறையினரும் கூட்டாக செயல்பட்டு மண்டபம் அருகே உள்ள கடல் வழித்தடத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    அப்போது மணாலி தீவு அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த 3 பேர் ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர். இதை கண்ட அதிகாரிகள் மற்றும் கடலோர போலீசார் படகில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததும், அதிகாரிகளை கண்டதும் அந்த பார்சல்களை கடலில் வீசியதும் தெரியவந்தது.

    மேலும் 3 பேர் கொடுத்த தகவலின்பேரில் அதே நாள் இரவு மற்றொரு படகில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 21.26 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    இதற்கிடையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். கடந்த 2 நாட்களாக மணாலி தீவு அருகே இரவும், பகலுமாக கடற்படை வீரர்கள், நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் ஆகியோர் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டி பார்சல்களை தேடினர்.

    கடலுக்கு அடியில் சென்று தேடும் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் முத்து எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் நவீன எந்திரங்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட முயற்சிக்கு பிறகு நேற்று மதியம் கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சல் கண்டெடுக்கப்பட்டது. மண்டபம் கடற்கரை முகாமுக்கு கொண்டு வரப்பட்ட பார்சல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    அப்போது அதில் 11.60 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.இந்த கடத்தல் சம்பவத்தில் மட்டும் மொத்தம் 32.80 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ20.20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தன.

    இதற்கிடையில் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை 2 படகுகளில் கடத்தி வந்த 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த முகமது நாசர் (வயது 35), சாதிக் அலி (32), முகமது அசார் (30), அப்துல் அமீது (33), தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ரவிக்குமார் (46) என தெரியவந்தது.

    அவர்களை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மதுரையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு இன்று அழைத்து வந்தனர். அங்கு தங்கக்கட்டிகள் கடத்தல் தொடர்பாக 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? யாருக்காக தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வரப்பட்டது? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    வளைகுடா நாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பண பரிமாற்றங்கள் அதிகளவில் நடந்து வந்தன. தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடு பிடியால் ஹவாலா பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் கடத்தல்காரர்கள் அரபுநாடுகளில் இருந்து ஹவாலா பணம் மூலம் தங்க கட்டிகளை வாங்கி இலங்கைக்கு கொண்டு வருகின்றனர். அந்த நாட்டில் கெடுபிடிகள் குறைவு காரணமாக கடத்தல்காரர்களுக்கு தங்க கட்டிகளை கொண்டு வருவது எளிதாக உள்ளது.

    அங்கிருந்து படகுகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி கொண்டு வந்து இங்குள்ள சிலரிடம் கொடுத்து பணமாக மாற்றி வருவதாக தெரிகிறது. அது தொடர்பாக கைதான வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் பாலக்காடு ரெயில் நிலையம் வந்த போது, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு ரெயில் சென்று வருகிறது.

    இந்த ரெயில் புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    அந்த ரெயில் பாலக்காடு ரெயில் நிலையம் வந்த போது, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த ஒருவரது நடவடிக்கை சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததால் போலீசார் அவரை சோதனைக்கு உட்படுத்தினர்.

    அப்போது அவர் தனது இடுப்பில் துணியால் பணத்தை கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் வைத்திருந்த ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது. அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கருதினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பணத்தை கொண்டு வந்தவர் கோட்டயம் மாவட்டம் ஈராற்று பேட்டையை சேர்ந்த முகமது ஹாஷிம் (வயது 52) என்பதும், சேலத்தில் இருந்து அங்கமாலிக்கு பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருப்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக 2 பேர் வந்தனர்.

    இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் இருவரும் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சீட்டுக்கு அடியில் பை ஒன்று இருந்தது. அதை எடுத்து பார்த்தனர். அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த பணம் எப்படி வந்தது என்பது பற்றி இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு இருவரும் சரியாக பதில் அளிக்க வில்லை.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பணத்தை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். கட்டு கட்டாக இருந்த பணத்தை போலீசார் எண்ணி பார்த்தனர்.

    அப்போது ரூ.31 லட்சம் பணம் பையில் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதற்கு கணக்கு கேட்டனர். ஆனால் போலீசில் சிக்கியவர்களால் அதற்கு கணக்கு கொடுக்க முடியவில்லை.

    இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரூ.31 லட்சம் பணத்தையும் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி பெயர் விவரங்களை கேட்டனர். அவர்கள் மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் ராயபுரம் பகுதியை சேர்ந்த மதிவேல் என்பது தெரியவந்தது.

    இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ரெயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த பயணி ஒருவரிடம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.
    • ஹவாலா பணம் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    ரெயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த பயணி ஒருவரிடம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அவரது பையில் ரூ.78 லட்சத்து 44 ஆயிரம் கட்டுக்கட்டாக இருந்தது. அந்த பணத்திற்கான ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த வேங்கட சதீஷ்(36) என்பது தெரியவந்தது. மேலும் அவர் விஜயவாடாவில் இருந்து டிக்கெட் எடுக்காமல் சென்னை சென்ட்ரல் வரை பயணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்த ரூ.78 லட்சத்தை ரெயில்வே போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஹவாலா பணம் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×