செய்திகள்
கொலையுண்ட கிருஷ்ணன், சுசீலா, ஆர்சா, அர்ஜுன்.

கேரளாவில் மனைவி, மகன், மகளுடன் மந்திரவாதி வெட்டி கொலை

Published On 2018-08-02 05:02 GMT   |   Update On 2018-08-02 05:02 GMT
கேரளாவில் மனைவி, மகன், மகளுடன் மந்திரவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஒரே குழியில் உடல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த காளியார் வன்னபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், (வயது 52). இவரது மனைவி சுசீலா (50). இவர்களுக்கு ஆர்சா (21) என்ற மகளும் அர்ஜுன் (18)என்ற மகனும் இருந்தனர்.

ஆர்சா கல்லூரி மாணவி, அர்ஜுன் பிளஸ்-2 மாணவர். இவர்கள் ஊரில் இருந்து ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்து வந்தனர். கிருஷ்ணன் விவசாயம் பார்த்தார். அதோடு மந்திரவாத செயல்களிலும் ஈடுபடுவார்.

இதனால் கிருஷ்ணனுடன் அக்கம் பக்கத்தினர் அதிகமாக பேசுவது இல்லை.

கிருஷ்ணனின் மகன் தினமும் அருகில் உள்ள வீட்டில் பால் வாங்கி செல்வது வழக்கம். கடந்த 2 நாட்களாக அவர், பால் வாங்க செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பால்காரர், கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று பார்த்தார்.

அங்கு ரத்தக்கறையும், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களும் வீடு முன்பு கிடப்பதை கண்டார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

வீட்டில் யாரையும் காணவில்லை. வீட்டிற்கு பின்புறம் குழி தோண்டப்பட்டு பின்னர் மூடப்பட்டிருப்பதை கண்டனர். அதனை போலீசார் தோண்டிப்பார்த்தனர். குழிக்குள் கிருஷ்ணன், அவரது மனைவி சுசீலா, மகள் ஆர்சா, மகன் அர்ஜுன் ஆகியோர் பிணமாக புதைக்கப்பட்டிருந்தனர்.

ஒரே குழிக்குள் ஒன்றன் மீது ஒன்றாக உடல்கள் போடப்பட்டிருந்தன. யாரோ மர்மநபர்கள் மந்திரவாதியையும் அவரது குடும்பத்தினரையும் கொன்று புதைத்துள்ளனர். இதையடுத்து அங்கு மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது.

இச்சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதியை குடும்பத்துடன் கொலை செய்தது யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News