செய்திகள்

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Published On 2018-07-19 12:58 GMT   |   Update On 2018-07-19 12:58 GMT
வங்கிக்கடன் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. #MansoonSession
புதுடெல்லி:

வங்கிகளில் கடனாக வாங்கிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை முறையாக திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான சட்ட மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி பியூஸ் கோயல் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து, மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும்.

இந்த மசோதாவின் படி, வங்கிகளில் ரூ.100 கோடிக்கும் மேல் கடன் பெற்று அதை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடினாலோ அல்லது விசாரணைக்காக நாடு திரும்ப மறுத்தாலோ அவரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பின்னர், அவர்களுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான மனு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மேலும், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களை பண மோசடி சட்டத்தின்படி தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவித்து அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீதிமன்றத்தில், குற்றவாளிகளின் தரப்பு எதிர்மனு தாக்கல் செய்வது தடை செய்யப்படும். தலைமறைவு பொருளாதார குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அடுத்த 2 ஆண்டுக்குள் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். 
Tags:    

Similar News