செய்திகள்

மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் இணைப்பு - மோடி பெருமிதம்

Published On 2018-06-27 13:36 GMT   |   Update On 2018-06-27 13:36 GMT
மத்திய அரசின் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் பயனடைந்ததை எண்ணி பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi
புதுடெல்லி :

பிரதான் மந்திரி ஜீவன் பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் சுரக்‌ஷா யோஜனா, அடல் பென்சன் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி வியாய் வந்தனா யோஜனா உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்களால் பயனடைந்த மக்களுடன் பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலமாக இன்று உரையாடினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "வாழ்க்கையில் எது நிச்சயமானது, எது நிச்சயமற்றது என்பது பற்றி நமக்கு எல்லோருக்கும் தெரியும். எனவே, சமூக பாதுகாப்பு திட்டங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள தேவையான வலிமையை மக்களுக்கு தருகின்றன. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் இந்த வலிமை பல கோடி மக்களை சென்றடைந்துள்ளதை எண்ணி பெருமைப்படுகிறேன்" என தெரிவித்தார்.

மேலும். “கடந்த நான்கு ஆண்டுகளில் வங்கிக் கணக்கு இல்லாத 28 கோடி பேருக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் உலகம் முழுதும் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் இது மட்டுமே 55 சதவிகிதம் ஆகும்.



பெண்கள் அதிகளவில் வங்கிக்கணக்குகள் வைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதியியல் சார்ந்த இடங்களில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது மத்திய அரசின் நல திட்டங்களினால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PMModi
Tags:    

Similar News