செய்திகள்

எதிரியை தடுத்து நிறுத்த பெற்ற தாயை மனித கேடயமாக்கிய மகன்

Published On 2018-06-23 07:19 GMT   |   Update On 2018-06-23 07:32 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில், விவசாயி ஒருவர் நிலத்தகராறின்போது எதிரியை தடுத்து நிறுத்துவதற்காக பெற்ற தாயை மனித கேடயமாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.#Maharashtra #LandDispute #SonThrewMother
வாஷிம்:

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம், முன்ஷிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகாதேவ் லட்சுமண் ராவத் என்பவருக்கும், கைலாஸ் தால்வி என்பவருக்குமிடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தை தாசில்தாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் ராவத். அப்போது பிரச்சனைக்குரிய அந்த நிலம் ராவத்துக்கு சொந்தமானது என தீர்ப்பு வந்தது.

தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததால், ராவத் கடந்த 21-ம் தேதி அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது தால்வி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு வந்து பயிரிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். டிராக்டர் தொடர்ந்து முன்னேறியதால், ஆத்திரமடைந்த தால்வி, தன் தாயாரை டிராக்டரின் முன் தள்ளிவிடுகிறார். இதனால் பயந்துபோன டிரைவர் டிராக்டரை சற்று பின்னோக்கி நகர்த்துகிறார்.

அதன்பிறகும், தள்ளாடிய நிலையில் இருக்கும் தாயாரை மீண்டும் டிராக்டரின் முன்னால் தூக்கி போடுகின்றனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதேசமயம், ராவத் மற்றும் அவரது தரப்பினர் தால்வியை மரத்தில் கட்டி வைத்ததாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக மாலேகான் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Maharashtra #LandDispute #SonThrewMother
Tags:    

Similar News