செய்திகள்
தண்டனையை நிறுத்திவைக்க கோரிய மனு விசாரணைக்காக சல்மான்கான் கோர்ட்டில் ஆஜர்
மான் வேட்டை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய மனு மீதான விசாரணைக்காக நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். #SalmanKhan #BlackBuckPoachingCase
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நடந்த போது, அங்கிருந்த சல்மான்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் அரிய வகை இரண்டு மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நடிகர் சயீப்அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 5-ம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், சல்மான்கானுக்கு 10 ஆயிரம் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சல்மான்கானை தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை அடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களில் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராக வந்த காட்சி
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என சல்மான்கான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்க உள்ள நிலையில், அவர் இன்று ஜோத்பூர் கோர்ட்டில் ஆஜரானார். அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #BlackBuckPoachingCase #SalmanKhan