செய்திகள்

ஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்

Published On 2018-04-27 06:17 GMT   |   Update On 2018-04-27 06:17 GMT
பாராளுமன்றத்தில் மேல்-சபை நியமன எம்.பி.யாக இருந்தபோது ஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் சம்பளம் கிடைத்துள்ளது. #ActressRekha #RajyasabhaMP
புதுடெல்லி:

கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், நடிகை ரேகா உள்பட 12 பிரபலங்கள் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி பாராளுமன்ற மேல்-சபை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 6 ஆண்டுகளாக எம்.பி. அந்தஸ்துடன் வலம் வந்த அந்த 12 பேரும் பல்வேறு பலன்களை, சலுகைகளை அனுபவித்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) தெண்டுல்கர், ரேகா உள்ளிட்ட 12 நியமன எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து இந்த 12 பேரும் தங்களது 6 ஆண்டுகள் பதவி காலத்தில் எப்படி செயல்பட்டனர் என்று ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது 12 நியமன எம்.பி.க்களும் சரியாக பாராளுமன்றத்துக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. மொத்த பாராளுமன்ற மேல்- சபை வேலை நாட்களில் தெண்டுல்கர் 7 சதவீதம் நாட்களே வந்திருந்தார்.

தெண்டுல்கர் பரவாயில்லை என்று சொல்லும் வகையில் நடிகை ரேகா, மிக குறைவான நாட்களே பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவர் வெறும் 4 சதவீதம் நாட்களே பாராளுமன்ற கூட்டத்துக்கு வந்ததாக வருகை பதிவேடுகளில் குறிப்புகள் உள்ளது.

ஆனால் எம்.பி.க்குரிய மாத சம்பளத்தை மட்டும் தவறாமல் பெற்றுள்ளனர். அந்த வகையில் நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் சம்பளம் கிடைத்துள்ளது. தெண்டுல்கர் ரூ.90.97 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.


6 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த தெண்டுல்கர் 22 கேள்விகளை எழுப்பி பதில் பெற்றுள்ளார். ஆனால் நடிகை ரேகா எம்.பி.யாக இருந்த கடந்த 6 ஆண்டுகளில் ஒரு கேள்வி கூட கேட்டதே இல்லை.

நியமன எம்.பி.க்களான தொழில் அதிபர் அனுஅகா, வக்கீல் பரசராம், விளையாட்டு வீராங்கனை மேரி கோம், பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ், நடிகை ரூபாகங்குலி, நடிகர் சுரேஷ்கோபி, பத்திரிகையாளர் சுவப்ன தாஸ்குப்தா ஆகியோரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. ஆனால் சம்பளம் மற்றும் அலவன்சுகளை மிகச்சரியாக பெற்றுள்ளனர். #Parliament #ActressRekha #RajyasabhaMP
Tags:    

Similar News