செய்திகள்

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி

Published On 2018-04-17 07:37 GMT   |   Update On 2018-04-17 07:37 GMT
மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சல்மான்கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #SalmanKhan
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நடந்த போது, அங்கிருந்த சல்மான்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் அரிய வகை இரண்டு மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் சயீப்அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 5-ம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், சல்மான்கானுக்கு 10 ஆயிரம் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சல்மான்கானை தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை அடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களில் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா, நேபாளம், துபாய் உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு செல்லவேண்டியது உள்ளதால் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் ஜோத்பூர் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். அவரது இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுமதி அளித்தார். #BlackBuckPoachingCase #SalmanKhan
Tags:    

Similar News