செய்திகள்
நேபாளம் பிரதமருக்கு கவுரவ டாக்டர் பட்டம் - உத்தராகண்ட் பல்கலைக்கழகம் அளித்தது
இந்தியா வந்துள்ள நேபாளம் பிரதமர் சர்மா ஒலிக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜி.பி. பன்ட் பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. #nepalpm #UttarakhandUniversity #Honorary
டேராடூன்:
சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக 2-வது முறையாக அண்மையில் கே.பி.சர்மா ஒலி தேர்வு செய்யப்பட்டார். 3 நாள் அரசு முறைப்பயணமாக மனைவி ராதிகா ஷாக்யாவுடன் சர்மா ஒலி இந்தியா வந்துள்ளார்.
அவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதைத்தொடர்ந்து சர்மா ஒலி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளின் உறவை இன்னும் மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
ராணுவம், இணைப்பு வழி திட்டங்கள், வர்த்தகம், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், குறிப்பாக நேபாள தலைநகர் காட்மாண்டுவை இந்தியாவுடன் இணைத்திடும் வகையில் புதிய ரெயில்பாதை அமைப்பதற்கு இரு தரப்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்பு பிரதமர் மோடி கூறுகையில், “நேபாளம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணும் வேட்கை கொண்டு உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையிலும், அந்நாட்டின் ஜனநாயகத்தை மேம்படுத்திடவும், தனது அண்டை நாடான நேபாளத்துடன் இணைந்து இந்தியா செயல்படும்” என்றார்.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள ஜி.பி. பன்ட் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நேபாளம் பிரதமர் சர்மா ஒலிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. #tamilnews #nepalpm #UttarakhandUniversity #Honorary