செய்திகள்
இப்போது நினைத்தால் கூட என்னால் பிரதமர் ஆக முடியும் - பாபா ராம்தேவ் பேட்டி
கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாபா ராம்தேவ், இப்போது நினைத்தால் கூட என்னால் பிரதமர் ஆக முடியும் என கூறினார். #BabaRamdev #GoaFest2018
பனாஜி:
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் திடீர் வளர்ச்சிக்கு பின் பா.ஜ.க. இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் தற்போது பாபா ராம்தேவ், தான் நினைத்து இருந்தால் பா.ஜ.க. கட்சியில் சேர்ந்து இந்திய பிரதமராகி இருக்க முடியும் என கூறியுள்ளார்.
கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ''நான் நடத்தும் நிறுவனத்தில் இருந்து எப்போதும் எனக்கு வருமானம் தேவைப்பட்டது இல்லை. நான் இதை பொது நல நோக்கத்தோடு மட்டுமே செய்கிறேன். மக்களுக்கு நல்ல தரமான பொருட்கள் செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் இந்த பொருட்களை விற்பனை செய்கிறேன்.
எனக்கு சின்ன வயதில் இருந்து கிழக்கிந்திய கம்பெனி மீது பெரிய கோபம் இருக்கிறது. அதனால், அவர்களை போல ஒரு இந்திய நிறுவனம் பெரிதாக வளர வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் பதஞ்சலி நிறுவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தேன். இப்போது அது பெரிய நிறுவனமாக மாறியுள்ளது.
நான் நினைத்து இருந்தால் பிரதமராகி இருக்க முடியும் . பா.ஜ.க.வில் எனக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கட்சி அலுவலகம் திறந்து முதலமைச்சராகவோ, எம்.பியாகவோ, பிரதமராகவோ முடியும். எனக்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் எனக்கு எப்போதும் பிரதமர் ஆக விருப்பமில்லை. எனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இருந்ததே இல்லை. நான் இப்படியே மக்களுக்கு சேவை செய்யவும், பதஞ்சலி மூலம் பொருட்கள் விற்கவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். #BabaRamdev #GoaFest2018