செய்திகள்

கைதி எண் 106 - சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கான் நாளை ஜாமீன் கோருகிறார்

Published On 2018-04-05 14:55 GMT   |   Update On 2018-04-05 14:55 GMT
மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சல்மான்கானுக்கு 106 என கைதி எண் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார். #BlackBuckPoachingCase #SalmanKhan
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்த போது, அங்கிருந்த சல்மான்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் அரிய வகை இரண்டு மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் சயீப்அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சல்மான்கானை குற்றவாளி என அறிவித்த நீதிபதி அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


சல்மான்கானை தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை அடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின்னர் வார்டு 2-ல் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கோரி அவர் நாளை மனுத்தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 106-ம் எண் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார். “சிறை உடை நாளை அவருக்கு வழங்கப்படும். அவர் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் உயர் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என அவர் கூறினார். #BlackBuckPoachingCase #SalmanKhan
Tags:    

Similar News