செய்திகள்

கால்நடைத் தீவன ஊழல் - நான்காவது வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை

Published On 2018-03-24 06:10 GMT   |   Update On 2018-03-24 08:13 GMT
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு இன்று 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #FodderScam #Lalu
பாட்னா:

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ். பீகார் முதல்வராக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி பணத்தை முறைகேடாக எடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று கடந்த 19-ம் தேதி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. லாலுவுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழ் 7 ஆண்டு மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 7 ஆண்டு என மொத்தம் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் மற்றவர்களுக்கான தண்டனை விவரமும் வெளியிடப்பட்டது.  #FodderScam #Lalu #tamilnews
Tags:    

Similar News