செய்திகள்

நிரவ் மோடி விவகாரத்தில் கைதான விபுல் அம்பானி உள்பட 6 பேருக்கு மார்ச் 5 வரை காவல்

Published On 2018-02-22 01:15 GMT   |   Update On 2018-02-22 01:15 GMT
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள விபுல் அம்பானி உள்பட 6 பேருக்கு மார்ச் 5-ம் தேதி வரை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PNBScam #NiravModi
புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள விபுல் அம்பானி உள்பட 6 பேருக்கு மார்ச் 5-ம் தேதி வரை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார்.

சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிந்தது. தற்போது நியூயார்க்கில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அவருடன் உறவினர் மெகுல் சோசி மற்றும் குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.

இவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது. நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

இதற்கிடையே, நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக இருந்த அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி உள்பட 6 பேரை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தியது.  

இந்நிலையில், நிரவ் மோடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள விபுல் அம்பானி உள்பட 6 பேரும் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், அவர்களை மார்ச் 5-ம் தேதி வரை காவலில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. #PNBScam #NiravModi  #tamilnews
Tags:    

Similar News