செய்திகள்

ஐதராபாத் கடைசி நிஜாமின் மகன் காலமானார்

Published On 2018-02-19 11:00 GMT   |   Update On 2018-02-19 11:00 GMT
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்த ஐதராபாத் கடைசி நிஜாமின் மகன் நவாப் பஸல் ஜா பஹதூர் காலமானார்.
ஐதராபாத்:

ஐதராபாத்தின் நிசாம்-உல்-முல்க் பரவலாக ஐதராபாத் நிஜாம் என்று அறியப்படுபவர்கள் ஐதராபாத் அரசு என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர்.

இவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த ஐதராபாத் அரசு தற்கால ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.

1719-ம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் நிஜாம் என்ற பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த முதலாம் அசாஃப் ஜா இந்த வம்சத்தை துவங்கினார்.

1707-ல் பேரரசர் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டார். 1798 முதல் பிரித்தானிய இந்தியாவின் பல சிற்றரரசுகளில் ஒன்றாகவும், உள் விவகாரங்களில் தன்னாட்சி கொண்டதாகவும், ஐதராபாத் அரசு விளங்கியது.

ஐதராபாத் பகுதியை இரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிஜாம்கள் ஆண்டுள்ளனர். அசாப் சா மன்னர்கள் இலக்கியம், கலை, கட்டிட வடிவமைப்பு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர்.

ஐதராபாத் அரசுக்கு உட்பட்ட பகுதிகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க இந்திய இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரண் அடைந்ததால் 17-9-1948  அன்று நிஜாம்களின் ஆட்சி முடிவடைந்தது.

இந்த நிஜாம்களின் வாரிசுகளில் சிலர் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஏழாவது (கடைசி) நிஜாமின் கடைசி மகனான நவாப் பஸல் ஜா பஹதூர்(72) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் நேற்று மாலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாக ஏழாவது நிஜாமின் பேரனும் நிஜாம் குடும்பங்களுக்கான நல்வாழ்வு சங்கத்தின் தலைவருமான நவாப் நஜாப் அலி கான் தெரிவித்துள்ளார். #Tamilnews
Tags:    

Similar News