செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - மம்தா பானர்ஜி
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக மத்திய அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #PunjabNationalBank #Niravmodi #PMModi #Mamtabanarji
கொல்கத்தா:
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார்.
சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிய வந்தது. தற்போது நியூயார்க்கில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அவருடன் உறவினர் மெகுல் சோசி மற்றும் குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.
இவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது. இதற்காக நேச நாட்டைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை கண்டுபிடிக்க பிறப்பிக்கப்படும் பரவல் அறிவிப்பை வெளியிடுமாறு சர்வதேச போலீசை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. நேற்று கைது செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி டுவிட்டரில் கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நடைபெற்றுள்ள மிக பெரிய பணபரிமாற்ற மோசடி இது. இந்த மோசடியில் மேலும் பல வங்கிகளுக்கு தொடர்பு இருக்கலாம். எனவே மத்திய அரசு இந்த மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், நிதி மந்திரி அருண் ஜெட்லியும் வாய் திறக்காதது ஏன்? என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#PunjabNationalBank #Niravmodi #PMModi #Mamtabanarji #tamilnews