செய்திகள்
அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை பயன்படுத்த அனுமதி வேண்டும்: டிடிவி மனு மீது நாளை விசாரணை
அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை நடத்த உள்ளது. #TTVDhinakaran
புதுடெல்லி:
அ.தி.மு.க.வின் அணிகள் இணைப்புக்குப் பிறகு தனித்து செயல்பட்டு வரும் டிடிவி தினகரன், சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அத்துடன் உள்ளாட்சித் தேர்தலும் தனது ஆதரவாளர்களை தயார்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி ஐகோர்ட்டில் தினகரன் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அதனால் ‘அ.தி.மு.க. அம்மா’ என்ற பெயரில் தங்கள் அணி செயல்பட அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் அமோக வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியதோடு தங்களுக்கு புது சின்னம் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் தங்களது மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினகரன் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு நாளை விசாரணைக்கு வருகிறது. #TTVDhinakaran #tamilnews