செய்திகள்

ரூ.487 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது

Published On 2018-01-23 09:33 GMT   |   Update On 2018-01-23 09:33 GMT
இந்தோனேசியா நாட்டில் இருந்து மட்டமான நிலக்கரியை இறக்குமதி செய்து தேசிய அனல் மின்நிலையத்துக்கு வினியோகித்த வகையில் நடந்த 487 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது.
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் சில மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு இந்தோனேசியா நாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து வினியோகித்த வகையில் கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆண்டுகளுக்கு இடையில் ஏகப்பட்ட நிதி முறைகேடு நடைபெற்றதாக மத்திய வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில் தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து தரத்தில் சிறந்ததாக கணக்கு காட்டி, போலி ரசீதுகள் தயாரித்து அரசுக்கு  487 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த ஊழல் தொடர்பாக கோஸ்ட்டல் எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஏ.ஆர்.புஹாரி, சன்னி, மற்றும் தேசிய அனல் மின்சார உற்பத்தி நிறுவனம், மெட்டல்ஸ் அன்ட் மினரல்ஸ் கார்ப்பரேஷன், ஆரவள்ளி பவர் கம்பெனி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள்மீது சி.பி.ஐ. அதிகாரிகள் கிரிமினல் சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியுள்ளதாக சி.பி.ஐ. இன்று தெரிவித்துள்ளது. #tamilnews
Tags:    

Similar News