செய்திகள்

10 லட்சம் ரூபாய்க்கு பூதம் விற்க முயன்ற 4 பேர் கைது

Published On 2018-01-20 13:37 GMT   |   Update On 2018-01-20 13:37 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கண்ணாடி புட்டிக்குள் பூதத்தை அடைத்து விற்க முயன்ற போலீஸ் டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா:

கொல்கத்தா அருகேயுள்ள பகுயாட்டி பகுதியை சேர்ந்தவர் டபஸ் ராய் சவுத்ரி. இவரை தொடர்புகொண்ட ஒரு நண்பர், உனது தேவையை எல்லாம் நிறைவேற்றிதரும் சக்தி கொண்ட ஒரு பூதம் தனக்கு வேண்டிய நபரிடம் உள்ளதாக கூறினார். 

இதையடுத்து, அந்த ‘பூத வியாபாரியை’ சந்திக்க டபஸ் ராய் சவுத்ரி அந்த நண்பருடன் அருகாமையுள்ள பர்த்வான் நகருக்கு சென்றார். அவர்களை வரவேற்று போலீஸ் வாகனத்தில் அங்குள்ள ஒரு ஓட்டல் அறைக்கு நான்குபேர் அழைத்து சென்றனர்.

ஒரு ரூபாய் நாணயம் உள்ளே கிடந்த குளிர்பான பாட்டிலை அவர்களிடம் காட்டி பத்து லட்சம் ரூபாய் பணம் எங்கே? என்று அவர்கள் கேட்டனர். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறிய டபஸ் ராய் சவுத்ரி மற்றும் அவரது நண்பரை நான்குபேர் கொண்ட கும்பல் தாக்கியது. அவர்களிடம் இருந்த 600 ரூபாயை பறித்துகொண்டு, அந்த ஓட்டல் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

அறைக்குள் சிக்கிதவித்த டபஸ் ராய் சவுத்ரி, கைபேசி மூலமாக மற்றொரு நண்பருக்கு தகவல் அளித்தார். அவர் பர்த்வான் போலீசாருக்கு தகவல் அளிக்க, விரைந்துவந்த போலீசார் டபஸ் ராய் சவுத்ரியை மீட்டனர். அவரை மோசடி செய்ய முயன்ற போலீஸ் டிரைவர் உள்பட 4 பேரை கடந்த வியாழக்கிழமை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews #geniebottle
Tags:    

Similar News