செய்திகள்
டெல்லி சட்டசபையில் இருந்து கபில் மிஸ்ரா மீண்டும் வெளியேற்றம்
டெல்லி சட்டசபையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா மீண்டும் வெளியேற்றப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபையின் மூன்று நாள் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா, கட்சி தலைமைக்கு எதிராக தொடர்ந்து அமளியை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மூன்று இடங்களை விற்பனை செய்துள்ளதாகவும், அதுதொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று சட்டசபையில் கோஷம் எழுப்பினார். கட்சியை விமர்சிக்கும் வகையிலான போஸ்டரும் கொண்டு வந்திருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், சபைக்குள் போஸ்டர் கொண்டு வந்ததற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இதனால் அவரை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
அதேபோல் இன்றும் சட்டசபையில் கபில் மிஸ்ரா பிரச்சினை எழுப்பினார். சபையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால் அவரை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். #tamilnews