செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி மீது குற்றச்சாட்டு - மத்திய சட்டமந்திரியுடன் பிரதமர் அவசர ஆலோசனை
சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதையடுத்து, மத்திய சட்டமந்திரியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுடெல்லி:
இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் உள்ளிட்ட நான்கு பேரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும், என கூறினர்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத்-உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.