செய்திகள்

பிரதமர் மோடி கிருஷ்ணரின் அவதாரம் - பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2017-12-29 19:52 GMT   |   Update On 2017-12-29 19:52 GMT
பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான்தேவ் அகுஜா, பிரதமர் நரேந்திர மோடியை கிருஷ்ணரின் அவதாரம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் கியான்தேவ் அகுஜா. இவர் சமீபத்தில், மாடுகளை கடத்தும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர்.

தற்போது இவர், பிரதமர் நரேந்திர மோடியை கிருஷ்ணரின் அவதாரம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



பிரதமர் மோடி கடவுள் கிருஷ்ணரின் அவதாரம். அவர் தனித்துவமான ஆளுமை பெற்றவர். மக்கள் அவரை இப்போது அங்கீகரிக்காமல் இருக்கலாம். ஆனால் அதற்கான நேரம் விரைவில் வரும்.

2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு அவர் நம் நாட்டை ஆளுவார். நாம் ஒரு காலத்தில் நேரு குடும்பத்தினர் கைகளில் ஆட்சியை கொடுத்தோம். அது வாரிசு அரசியலாக மாறிப்போனது. ஆனால் மோடியே தனது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை கூட அவருடைய அரசு இல்லத்துக்கு அழைப்பதில்லை.

பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அனைவருக்கும் வங்கி கணக்கு போன்ற பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுத்தவர்.

ஒரு காலத்தில் நமது முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி இப்படி சிறப்பாக செயல்பட்டபோது மற்றொரு முன்னாள் பிரதமரான வாஜ்பாய், இந்திரா காந்தியை ‘துர்கா’ (பெண் கடவுள்) என்று அழைத்தார்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News