செய்திகள் (Tamil News)

டெல்லி: 5,300 குழந்தைகள் மனித நுரையீரல் போல் வடிவமைத்து கின்னஸ் சாதனை

Published On 2017-12-23 11:38 GMT   |   Update On 2017-12-23 11:38 GMT
டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 5,300 குழந்தைகள் மிக பெரிய மனித நுரையீரல் போல் வடிவமைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர்.
புதுடெல்லி:

உலகளவில் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக, இந்தியாவிலும், குறிப்பாக வட மாநிலங்களில் வசிக்கும் மக்கள் காற்று மாசுபாடு காரணமாக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்களில் இருந்து நுரையீரலை பாதுகாப்பதை வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தியாகராஜா மைதானத்தில் சுமார் 5,300 குழந்தைகள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 35 பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 5,300 குழந்தைகள் மிக பெரிய மனித நுரையீரல் போன்ற உருவத்தை அமைத்திருந்தது கண்களை கவரும் விதமாக இருந்தது.

இதில் டெல்லி கவர்னர் அனில் பாய்ஜால் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வை கின்னஸ் புத்தகம் ஒரு சாதனையாக பதிவுசெய்துள்ளது.

ஏற்கனவே, பெய்ஜிங் மற்றும் அபுதாபியில் இதற்கும் குறைவான எண்ணிக்கையில் இதுபோன்று நிகழ்த்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் இந்த சாதனை முயற்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News