செய்திகள்

குஜராத் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல்: 68.7% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Published On 2017-12-14 13:31 GMT   |   Update On 2017-12-14 13:31 GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அகமதாபாத்:

குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 9-ம் தேதி 83 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 67 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 851 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில், 69 பேர் பெண்கள் ஆகும். 25,558 வாக்குச்சாவடிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்று இன்று காலை தொடங்கியது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.



இத்தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மத்திய மந்திரி அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சரியாக 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.

இன்றைய தேர்தலில் 68.7 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் வரும் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
Tags:    

Similar News