செய்திகள்

சபரிமலை கோவிலில் நடை அடைப்பு இல்லை: திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்

Published On 2017-11-29 05:30 GMT   |   Update On 2017-11-29 05:30 GMT
சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியையடுத்து சபரிமலை கோவில் நடை தினமும் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
சபரிமலை:

கேரள மாநிலம் பந்தளம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் அம்பா தம்புராட்டி (வயது 94). இவர் கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தார். அதன் காரணமாக பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் நடை வருகிற 6-ந் தேதி வரை அடைக்கப்படுவதாக ராஜகுடும்பத்தினர் தெரிவித்தனர். 6-ந் தேதி நடைபெறும் சுத்தி கலச சடங்குகளுக்கு பின்னர் கோவில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அம்பா தம்புராட்டி மரணத்தை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 7 நாட்களுக்கு அடைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. அது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்து இருக்கிறது.

இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி ஆகும். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை தினமும் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி மண்டல பூஜைக்கு பின், அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். டிசம்பர் 30-ந் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜனவரி 20-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News